வெள்ளி, 28 மே, 2010

கல்வித் துறையின் அலட்சியமும், அவல நிலையும்

இரு நாட்களுக்கு முன் சென்னையில் டி.பி.ஐ வளாகத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகத்திற்கு செல்ல நேர்ந்தது. பின்னர் மாலை ஆர்வத்துடன் பிர்லா கோளரங்கத்திற்கு சென்றேன்.
அங்கு நான் கண்ட அவல காட்சிகள். இதை படித்தபிறகாவது சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
அவலக் காட்சி 1. கல்வித்துறையின் நுழைவாயிலுக்கு அருகிலும் உள்ளே பல இடங்களிலும் குப்பை மேடுகள் மலை போல் காட்சியளிக்கின்றன. வருடத்திற்கு ஒரு முறை சரஸ்வதி பூஜை அன்று கூட குப்பை மேட்டில்தான் பூஜை செய்வார்கள் போலும்.கட்டிடங்கள் புதிதாக கட்டினால் மட்டும் போதுமா? குப்பையில் நடந்து தான் கல்வித்துறை அலுவலகத்திற்கு செல்லவேண்டுமா? உடனடியாக சுத்தப் படுத்தும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
அவலக் காட்சி 2. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்படும் நூல்கள் பெறும் இடம் பின்புறம் சென்றால் குளவிக் கூடு ஜாக்கிரதை. மீறி சென்றால் கரையான் அரித்த கணக்கு புத்தகங்கள் மட்டுமே கிடைக்கிறது. ஜூலைக்கு மேல்தான் மற்ற நூல்கள் கிடைக்குமாம். பாடங்கள் ஆரம்பித்து ஒரு மாதம் கழித்தாவது கிடைக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. குளவியிடமிருந்து கடி நிச்சயம்.
அவலக் காட்சி 3. தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்த கமிட்டியின் தலைவரான நீதியரசருக்கு பெண்களுக்கான கழிப்பிடத்திற்கு அருகே அறை. வேறு இடமே கிடைக்கவில்லையா? தமிழ் நாட்டு பாட நூல் நிறுவனக் கட்டிடத்தில்தான் சிபிஐக்கு இடம் கிடைத்ததா? சிபிஐக்கும் கல்வித் துறை வளாகத்திற்கும் என்ன சம்பந்தம்?
அவலக் காட்சி 4. தனியார் கடைகளை உள்ளேயிருந்து அகற்றியது சரியே. ஆனால் அனைத்து அலுவல்களுக்கும் நகலெடுக்க, தட்டச்சு செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ள வளாகத்தில் அரசு அனுமதியுடன் வாடகைக்காகவாது பொது மக்கள் நலன் கருதி ஓரிரு கடைகள் இருப்பது அவசியம்.இதற்கு அரசே கட்டண நிர்ணயம் கூட செய்யலாம்.
அவலக் காட்சி 5. பிர்லா கோளரங்கம் அனைத்து குழந்தைகளும் அவசியம் சென்று பயனடைய வேண்டிய இடம். அங்கு உள்ளே சுற்றி பார்க்கும் இடத்தில் அலுவலர்கள் அலட்சியமாக உட்கார்ந்து கொண்டு அசையாமல் எந்த விளக்கமும் தராது இருக்கிறார்கள். பெண் அலுவலர்கள் மதியம் உறங்கி கொண்டு இருக்கிறார்கள். தற்போது கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வரும் குழந்தைகளுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது.
அவலக் காட்சி 6. ஆயிரக்கணக்கில் வரும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  போதுமான குடி நீர் வசதியோ, ஒரு உணவு விடுதியோ இல்லை. வருகின்ற பார்வையாளர்களான பொது மக்கள் அங்கங்கே அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த தின்பண்டங்களின் மீதத்தையும் உணவையும் சிந்தி இடத்தை அசுத்தப் படுத்துகிறார்கள். கட்டணத்தை மட்டும் கறாராக வசூலிப்பவர்கள் இதனை கண்டும் காணாது இருப்பது ஏன்?
அவலமா? அலட்சியமா?
பிர்லா கோளரங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி கோளரங்கத்தில் காண்பிக்கும் படமும் 3டி படமும்தான். இதில் செய்யும் தவறுகளும் அசிரத்தையும் மிகுந்த வேதனையும் வருத்தமும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.
பூளுட்டோ கிரகம் இல்லை என்று அறிவித்த பிறகு இன்னும் கிரகம் என்று சொல்லும் பழைய வீடியோ டேப்பையே  காட்டி அனைவரையும் குழப்புவது ஏன்? உள்ளே இருக்கும் இருக்கைகளை விட அதிகம் டிக்கெட் விற்பதும் சரியான கோணத்தில் அமர்ந்து  பார்க்க வேண்டிய காட்சியை சாதாரண நாற்காலியில் உட்கார வைத்து அதே கட்டணம் வசூலிப்பது என்ன நியாயம்?
சம்பந்தப் பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் கல்வித்துறை சீரடையும். அனைவரும் பயனடைவர். செய்வார்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக